இந்தக் குழுவின் அனைத்து அங்கத்தினருக்கும் குழுவின் “நோக்கம்”அல்லது ”குறிக்கோள்” புரிவதில் எனக்கும் ஆனந்தமே.
வாலறிந்த வள்ளுவன் வகுத்த வழி
நூலறிந்தப் பெரியோர் நின்றார் சிலர்
நிற்காதார் பலர் பாரில்,- புவியில்
மேவிய இனம் தமிழினம்
கூனிக் குறுகும் காரணம் அறிவாரோ..??
மொழியும் சமூகமும் பிரிந்துக் கிடக்கும்
அவலம் அடிமுதல் காரணம் புரி.
தாய்மொழியில் உயராத சமூகம் அழியும்
நாளையத் தலைமுறைக்குத் தமிழ் இருக்குமா..??
நான்மறை கண்டவனுக்கே வெளிச்சம்,- நானறிந்த
மொழியை நாடறிய என் இனமறிய
நல்லவழிக் காண கண்டதோர் முயற்சி
”தமிழ்க்குடில்” தோற்றப் புலம் சொல்வேன்
”கேள்” என் இனமான ”தோழமையே”
தன்மொழி விட்டு பிறமொழி பாராட்டல்
தன் தாயின் இடுப்பில் இருந்தபடி
மாற்றாந்தாய் மார்பில் பாலருந்தும் செயல்
இதைச் செய்யும் ஒரே இனம்
”தமிழினம்” தலைகுனிகிறேன் தோழா...
வெட்கப்பட வேண்டும் நாம்,- உலகின்
மூத்தமொழி இன்று கையாளப் படாமல்
போக்கற்று திக்கற்று அனாதையாகிக் கிடக்கும்
அவலம் அகற்றும் சிறு முயற்சியில்
தமிழ்க்குடில் தளிர்நடைப் பயில்கிறது தரணியில்....
ஒவ்வொரு தமிழனுக்கும் தமிழுணர்வு ஊட்டி
ஒவ்வொரு தமிழச்சியும் பிள்ளைக்கு தமிழ்ப்பால்
ஊட்டச் செய்யும் உன்னத நோக்கில்
உன்னுடன் நாங்களும் நடைப் பயில்கிறோம்.
இனமான சொந்தமடா நீ எனக்கு
இன்னும் சொல்வேன் கேள்,- உலகம்
தமிழைத் திரும்பிப் பார்க்க வைக்கும்
எண்ணம் உண்டு என்னில் என்னோடு
தோள் கொடுக்கும் தோழமைக்கும் உண்டு
அறிவியல் அணுவியல் எல்லாம் இனித்
தமிழியல் ஆக்கும் நோக்கம் நமக்கு
கொஞ்சம் கூட வா... கைக்கொடு.
குனிந்த நம் இனம் தலைநிமிர
எலும்பு உடையும் வரை தலைநிமிர்வோம்
வீழ்வது வெட்கமல்ல.... வீழ்ந்துக் கிடப்பதுதான்.
நான் எழ முயல்கிறேன்.......... ”நீ”.